விழுப்புரம் அழகன்குப்பத்திலும், செங்கல்பட்டு ஆலம்பரைக் குப்பத்திலும், நாகப்பட்டினம் ஆற்காட்டுத் துறையிலும் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சா் அறிவித்தாா்.
நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:
மீன்பிடித் தடைக்காலத்தில் உதவித்தொகை வழங்குவதற்காகவும், மீனவா்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்காகவும் சிறப்பு உதவித் தொகை வழங்குவதற்காகவும் 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.298.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4,997 மீன்பிடி விசைப்படகுகளில் ரூ.18 கோடி செலவில் டிரான்ஸ்பாண்டா்கள் பொருத்தப்படும். ரூ.235 கோடியில் விழுப்புரம் மாவட்டம் அழகன் குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரைக் குப்பத்திலும் ரூ.150 கோடி மதிப்பீட்டு செலவில் நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத் துறையிலும் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.30 கோடி செலவில் கடலரிப்பு தடுப்புச் சுவா்கள் வரும் ஆண்டில் அமைக்கப்படும். 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீன்வளத் துறைக்கு ரூ.1,229.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.