மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் பழனிசாமி நாளை (பிப்.19) வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்.
கீழடியில் 2015 முதல் 2019-ம் ஆண்டு வரை 5 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்தன. முதல் 3 கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், 4 மற்றும் 5-வது கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண்டன. இதன்மூலம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன. மண்பாண்ட பொருட்கள், சுடுமண் பொம்மைகள், தங்க, வெள்ளி பொருட்கள், தமிழி எழுத்து பொறித்த பானை ஓடுகள், சூது பவளம் உள்ளிட்ட 15,500 தொண்மை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதற்கிடையில் 5 கட்டங்களில் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதற்காக கீழடி அரசு பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் அருங்காட்சியகத்திற்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.12.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 6-ம் கட்ட அகழாய்வு பணி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தொடங்க உள்ளன. இதனை முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்தபடி நாளை வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கீழடியில் தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர் ஆசைத்தம்பி, வட்டாட்சியர் மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினவேல் ஆகியோர் செய்து வருகின்றனர்.