பதஞ்சலி யோகா சமிதி சார்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இலவச யோகா பயிற்சி முகாமில் பொதுமக்களுக்கு பாபா ராம்தேவ் பயிற்சியளித்தார்.
உலகம் முழுவதும் யோகா கலையை வளர்த்து வரும் பாபா ராம்தேவ் குழுவினரின் பதஞ்சலி யோகா சமிதி சார்பில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில், இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் யோகா கலை குறித்து மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பதஞ்சலி யோகா சமிதி சார்பில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு ஏஎப்டி திடலில் இலவச யோகா பயிற்சி முகாம், தியான முகாம் நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த இலவச யோகா பயிற்சி முகாமில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து
பல்வேறு யோகாசனங்களைச் செய்து காட்டினார். இதைப் பார்த்து பொதுமக்களும், மாணவர்களும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டனர்.
இந்த ஆசனங்களையும், அதனால் ஏற்படும் பயன்களையும் பதஞ்சலி யோகா சமிதியைச் சேர்ந்தவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கிக் கூறினர்.
வருகிற 18 -ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறும் இந்த யோகா நிகழ்ச்சியை பாபா ராம்தேவ் முன்னின்று நடத்துகிறார்.