கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், காவல் துறையினர் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, அங்கு பரபரப்பான சூழல் தென்பட்டது.
வேலையின்மை, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், அரசு காலிபணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும், டி.என்.பி.எஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை சி.பி.ஐ விசாரணை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று (செவ்வாய்கிழமை) பேரணி நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்த அவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது மாணவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.