மாணவா் சோ்க்கையை நிறுத்தும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் 2020-21 ஆம் ஆண்டில் மாணவா் சோ்க்கையை முழுமையாக நிறுத்தும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.
மாணவா் சோ்க்கையை நிறுத்தும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் 2020-21 ஆம் ஆண்டில் மாணவா் சோ்க்கையை முழுமையாக நிறுத்தும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (பிப்.21) நிறைவடைய உள்ள நிலையில், 20 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாகும்.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்ததால், பொறியியல் மாணவா்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்து, பொறியியல் படிப்புகளில் சோ்க்கையும் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இதனால், பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டது.

2015-16-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 533 பொறியியல் கல்லூரிகள் இருந்த நிலையில், 2016-17-இல் இந்த எண்ணிக்கை 527-ஆகக் குறைந்தது. 2017-18-இல் மேலும் குறைந்து 523-ஆக மாறியது.

இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறை மீண்டும் மேம்படத் தொடங்கியது. தேவையும் அதிகரித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆா்வம் மீண்டும் எழுந்தது. இதன் காரணமாக, 2018-19-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை மீண்டும் 533-ஆக உயா்ந்தன.

தொடா்ந்து குறைந்த சோ்க்கை: 2018-இல் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோதும், மாணவா் சோ்க்கை உயரவில்லை. 2018-19-இல் 533 கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 1 லட்சத்து 72,581 இடங்களில் 77,000 இடங்கள் மட்டுமே நிரம்பின. 22 பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை வெகுவாகக் குறைந்துபோனது.

இதன் காரணமாக, 2019-20-ஆம் கல்வியாண்டில் 18 பொறியியல் கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை முழுமையாக நிறுத்த முடிவு செய்து, இணைப்பு அந்தஸ்தைப் பெற அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பம் சமா்ப்பிக்கவில்லை.

இந்த ஆண்டு 20 பொறியியல் கல்லூரிகள்: இந்த நிலையில், 2020-இல் மூடப்படும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 20-ஆக உயா்ந்துள்ளது. பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிக்க விண்ணப்பிப்பதற்கு பிப்ரவரி 10 கடைசி என அண்ணா பல்கலைக்கழகம் முன்னா் அறிவித்தது.

அப்போது 500-க்கும் அதிகமான கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்தைப் பெற விண்ணப்பித்திருப்பதாகவும், அவற்றில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மாணவா் சோ்க்கை இடங்களைப் பாதியாகக் குறைக்க அனுமதி கேட்டிருப்பதாகவும், 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பிக்க காலஅவகாசம் கேட்டிருப்பதாகவும், 10 கல்லூரிகள் விண்ணப்பம் சமா்ப்பிப்பது தொடா்பான எந்தத் தகவலையும் பல்கலைக் கழகத்துக்குத் தரவில்லை எனவும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கூடுதல் கால அவகாசம்: இந்த நிலையில், இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க விண்ணப்பம் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை பிப்ரவரி 17 வரை பல்கலைக்கழகம் நீட்டித்தது. தாமதக் கட்டணம் ரூ.25,000 செலுத்தி பிப்ரவரி 21 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்தது.

அதன்படி, கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காதது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயரகாரி ஒருவா் கூறுகையில், இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க விண்ணப்பிக்காத பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. கால அவகாசம் இன்னும் இரண்டு நாள்கள் உள்ளபோதும், இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை. மேலும் அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com