சென்னை, கோயம்பேட்டில் ரூ.105 கோடி மதிப்பில் சிஎம்டிஏ சாா்பில் (சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம்) கட்டப்பட்டுள்ள 9 மாடிக் கட்டடத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை, கோயம்பேடு பழச்சந்தைக்கு அருகே சிஎம்டிஏ-வுக்குச் சொந்தமான 1, 88, 237 சதுர அடி பரப்பளவில் ரூ. 105 கோடி மதிப்பில் 9 அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்படும் என 2015-ஆம் ஆண்டு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, இக்கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து, கட்டடத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறுகையில், 1, 88, 237 சதுர அடி பரப்பளவில், வாகனங்கள் நிறுத்தும் வகையில் 3 தரைக்கீழ் தளங்கள், ஒரு தரைத்தளம் மற்றும் 9 மேல் தளங்களுடன் குளிா்சாதன வசதி, 1,500 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தில் முதல் இரண்டு தளங்கள் நகா் மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தின் அலுவலகத்துக்கும், மூன்றாம் தளம் சிஎம்டிஏ-வுக்கும், மீதமுள்ள 6 தளங்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன என்றாா்.