மக்கள் நீதி மய்யத்தின் 3ம் ஆண்டு தொடக்கம்: நாளை நமதே என கமல் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3ம் ஆண்டு துவக்கம் குறித்து கட்சித் தலைவர் கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் 3ம் ஆண்டு தொடக்கம்: நாளை நமதே என கமல் வாழ்த்து


சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3ம் ஆண்டு துவக்கம் குறித்து கட்சித் தலைவர் கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில், 


அன்புகொண்டோர் அனைவருக்கும் வணக்கம்.

20/02/2020 இன்று நாம் அனைவரும் மூன்றாம் ஆண்டின் துவக்கத்தில் நிற்கின்றோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்சி ஆரம்பித்தப்பொழுதில் இருந்த அதே எழுச்சியோடும் வேகத்தோடும் நாம் இன்றும் களம் காண்கிறோம்.

இதற்கு முதல் காரணம், நாம் களம் கண்ட முதல் தேர்தலில் 17 லட்சம் வாக்குகள் அளித்து நம்மீது அவநம்பிக்கை கொண்டோரையும் ஆச்சரியத்தில் இமை உயர்த்த வைத்த நம் மக்களே.

நம் மனதிற்கு உரமேற்றிய அவர்களுக்கு நன்றி சொல்லும் தருணமிது.

அரசியலை வெகுதூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு நான் கட்சி ஆரம்பித்தவுடன் கொஞ்சமும் தயங்காமல் என்னோடு கைகோர்த்து கட்சி வளர்க்கும் நம் நிர்வாகிகளும் செயல் வீரர்களும் அனைவரும் கரம் குலுக்கி பாராட்ட வேண்டியவர்களே.

என் கனிவோடு என் கண்டிப்பையும் பொறுத்து கடந்த 38 ஆண்டுகளாக என் நிழலிலும், எனக்கு நிழலாகவும் இருக்கும், என் காலம் கடந்த பின்னும் எனக்கு அடையாளமாக இருக்கப்போகும் நற்பணி இயக்கத்தை கட்டிக்காத்துவரும் என் தோழர்களை நன்றியுடன் நினைக்கிறேன்.

இதுவரை என்ன செய்தோம் என்று கேட்போர் பாராட்ட நாம் சில செய்திருக்கிறோம். ஆனால் இன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது. அதற்கான பரீட்சை வெகு அருகில். “ஓய்வு மட்டுமல்லாமல் யோசிக்கவும் நம்மிடம் நேரமில்லை” அடுத்து வரும் நாட்களெல்லாம் “செயல்” “செயல்” மட்டுமே..... இன்று தொடங்குவோம் அதற்கான பணிகளை!

2021ல் வென்று தொடங்குவோம் மக்கள் பணிகளை. வாழ்த்துக்களோடும், நன்றிகளோடும், நம்பிக்கையோடும்.. நாளை நமதே என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com