டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்- 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, 20 பேரை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் -2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக சிபிசிஐடி தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, 22 பேரை கைது செய்தது. இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016- ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டனர். மூன்று முறைகேடு வழக்குகளிலும் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர், சிபிஐ, தமிழக தலைமைச் செயலாளர் ஆகிகோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை மார்ச் 20க்கு ஒத்திவைத்தது.