தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையில் புனித லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை தொடங்கியது.
இந்த விழாவை மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமில்லாமல், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏறத்தாழ 750 காளைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவற்றை கால்நடை மருத்துவர்கள் ஒவ்வொன்றாகப் பரிசோதித்து, அனுமதி வழங்கி வருகின்றனர்.
இதையடுத்து, வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்படுகிறது. காளைகளைப் பிடிப்பதற்காக 500-க்கும் அதிகமான வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவர்களை சுகாதாரத்துறை அலுவலர்கள் உடல் பரிசோதனை செய்து, தகுதியான நபர்களுக்கு அனுமதி வழங்கி வருகின்றனர். இந்த விழா மாலை வரை நடைபெற உள்ளது.