ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 3 புள்ளிமான்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தன.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள ரத்தினகிரி காப்புக்காட்டில் புள்ளிமான்கள் உள்பட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. கோடை காலம் தொடங்கி விட்டால் அவை தண்ணீர் மற்றும் இறை தேடி ஊருக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வனத்திலிருந்து வெளியே வரும் வனவிலங்குகள் சமூக விரோதிகள், நாய்கள் உள்ளிட்டவற்றால் வேட்டையாடப்படுவதும், வாகனங்கள் அடிபட்டு இறப்பதும் தொடர்கின்றன.
இந்நிலையில், ஆற்காடு அருகே தென்னந்தியலம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை சனிக்கிழமை இரவு புள்ளிமான்கள் கூட்டம் கடந்துள்ளன.
அவற்றின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 மான்கள் உயிரிழந்தன. தகவலறிந்த ஆற்காடு வனசரக ஊழியர்கள் விரைந்து சென்று உயிரிழந்த மான்களின் உடல்களை மீட்டதுடன், கால்நடை மருத்துவர்களை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்து உடல்களை அடக்கம் செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து ஆற்காடு வனச்சரகர் கந்தசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், ரத்தனகிரி காப்புக்காடு நவ்லாக் பண்ணை பகுதியில் உள்ள மான்கள் இறைதேடி வெளியே வந்தபோது வாகனம் மோதி இறந்திருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.