நாசா செல்லவுள்ள நாமக்கல் மாணவி அபிநயாவுக்கு முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி

அமெரிக்கா நாசா ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல் மாணவி அபிநயாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 
நாசா செல்லவுள்ள நாமக்கல் மாணவி அபிநயாவுக்கு முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி


அமெரிக்கா நாசா ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல் மாணவி அபிநயாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து, இந்தியா முழுவதும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவியருக்கு இணையம் வாயிலாக நடத்திய அறிவியல் தேர்வில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு படித்து வரும் அபிநயா என்ற பள்ளி மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் நாசா விண்வெளி மையத்திற்குச் செல்ல உள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும், எனது தனிப்பட்ட முறையிலும் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். மாணவி அபிநயா அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்கு செல்லவும், சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது அவரது திறமைக்கு கிடைத்த வெற்றியாகும்.

விண்வெளித்துறையில் அதிக ஆர்வம் கொண்ட மாணவி அபிநயா கல்வியில் சிறந்து விளங்கவும், விண்வெளித்துறையில் இதுபோன்று பற்பல சாதனைகள் படைத்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமெனவும் இத்தருணத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன்.

நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்வதையொட்டி, அபிநயாவின் சாதனையினை பாராட்டியும், வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாகவும், அபிநயாவிற்கு 2 லட்சம் ரூபாய் நிதியினை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com