சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் சிவராத்திரியையொட்டி ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 715 காளைகள் மற்றும் 282 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர். இவர்களில் சேலம் தாதகாப்பட்டி தினேஷ் (22), திருச்சி வேலம்பட்டி இளவரசன் (23), பார்வையாளர்கள் நாகியம்பட்டி ஹரி (22), மகேந்திரன் (30), பெருமாள் (50) ஆகிய 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சேலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாகியம்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற கனகராஜ் (30) பலத்த காயத்துடன் சேலம் அரசு மருத்துவத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் மாடுபிடி வீரருக்காக பதிவு செய்யாததால் காயமடைந்தவர்கள் பட்டியலில் இவரது பெயர் இடம்பெறாமல் மறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் தனது சகோதரர் பெயரில் பதிவு செய்த டோக்கன் மற்றும் சீருடையை முறைகேடாக அணிந்து ஜல்லிக்கட்டில் களமிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாடுபிடி வீரராக பதிவு செய்யாத ஒருவர், ஜல்லிக்கட்டில் பங்கேற்று உயிரிழந்தது சுகாதாரத்துறையினருக்கும், விழாக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.