தமிழக மக்களின் நலனுக்காவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை ஜெயின் மேரிஸ் தேவாலயத்தில் அன்னதான நிகழ்வை மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 'மதரீதியாக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த திமுக முயற்சித்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையிலேயே சமீபத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் ஈபிஎஸ் இணைந்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது போலவே தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கிறது. அவர்களுக்காக அதிமுக அரசு கொண்டு வரப்படும் திட்டங்களை பார்த்து திமுகவினர் ஆச்சரியப்படுகின்றனர் அதிமுகவின் பல்வேறு திட்டங்களை பார்த்து அவர்கள் பொறாமைப்படுகின்றனர்' கூறினார்.
பின்னர், பிரதமர் கையில் முதல்வர் இருந்தால் என்ன தவறு என்று பாஜகவின் மூத்த தலைவர் முரளிதரராவ் கூறியிருந்தது குறித்து பதிலளித்த அவர், 'அதிமுக யார் கையிலும் இல்லை; மக்கள் கையில் மட்டுமே உள்ளது.
மக்களுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். அவ்வாறு இருந்தால் மட்டுமே தமிழகத்தில் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வர முடியும்' என்று தெரிவித்தார்.