தங்கம் விலை உயர்வை சமாளிக்க இறக்குமதி வரியை நீக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

தங்கம் விலை உயர்வை சமாளிக்க இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
ராமதாஸ்
ராமதாஸ்

சென்னை: தங்கம் விலை உயர்வை சமாளிக்க இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது. தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.32,576 என்ற அளவுக்கு உயர்ந்திருப்பதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை நடத்தவுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டின் குறைந்தபட்ச விலையான ஒரு கிராம் ரூ.2992, ஒரு பவுன் ரூ.23,936 என்ற அளவுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.8640 உயர்ந்துள்ளது.

சீனாவை வதைத்து வரும் கரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் தொழில் மற்றும் ஏற்றுமதி  துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் பங்கு சந்தையில் நிச்சயமற்ற நிலை நிலவி வரும் சூழலில், முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை வாங்கிக் குவித்து வருவது தான் இந்நிலைக்கு காரணம் ஆகும். உலக அளவில் சந்தைகள் நிலைத்தன்மைக்கு எப்போது திரும்பும்? எப்போது தங்கத்தின் விலை குறையும்? என்பது தெரியாத நிலையில், இடைப்பட்ட காலத்தில்  திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை செய்ய நிச்சயத்திருப்பவர்கள் தங்கம் வாங்குவதற்காக சில லட்சம் ரூபாய்களை கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும். அதற்கு வசதியில்லாதவர்கள் வீட்டு  திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் தடைபடவும் வாய்ப்புகள் உள்ளன என்பது தான் கசப்பான உண்மை.

இதில் இன்னொரு உண்மை என்னவென்றால், ஆசியாவிலேயே இந்தியாவில் தான் தங்கத்தின் விலை அதிகம் ஆகும். இதற்கு காரணம் தங்கத்தின் மீது வசூலிக்கப்படும் அளவுக்கு அதிகமான  இறக்குமதி வரி தான். தங்கத்தின் மீது இறக்குமதி வரி வசூலிக்கும் கலாச்சாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் இல்லை. 2012-13-ம் ஆண்டில் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை அதிகமாக இருந்த போது, தங்க இறக்குமதியை குறைக்க அதன் மீதான இறக்குமதி வரியை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தான் 2 விழுக்காடு என்ற அளவில் அறிமுகப்படுத்தி, படிப்படியாக  10% என்ற அளவுக்கு உயர்த்தினார். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைந்தவுடன் இறக்குமதி வரி நீக்கப்படும் என்று சிதம்பரம் அளித்த வாக்குறுதி காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தங்கம் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமின்றி, கடந்த ஆண்டு மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற உடன் தங்கம் மீதான இறக்குமதி வரியை 12.50% ஆக அதிகரிக்கப்பட்டது. இது தவிர ஜி.எஸ்.டி வரியாக 3% வசூலிக்கப்படுகிறது. அரசுத் தரப்பில் இந்த அளவுக்கு வரிகள் விதிக்கப்படும் நிலையில், நகை வணிகர்கள் தரப்பில் 3% முதல் 25% வரை சேதாரம் என்ற பெயரில் பணம் பிடுங்கப்படுகிறது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி எதிர்பார்த்த பயனை தரவில்லை. மாறாக தங்கக் கடத்தலை ஊக்குவிக்கிறது. இது இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும். மாறாக, இறக்குமதி வரியை குறைத்து, தங்கக் கடத்தலைக் கட்டுப்படுத்தினால் அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் ஒரு பவுன் தங்கம் வாங்குவதற்கான செலவு ரூ.5000 வரை குறையும். இதைக் கருத்தில் கொண்டு தங்கம் மீதான இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்கவோ, கணிசமாக குறைக்கவோ அரசு முன்வர வேண்டும். அத்துடன் சேதாரம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளையையும் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com