தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை முதல்வர் தருவார் என நம்புவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சிஏஏவால் மக்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். தில்லியில் சட்டம் ஒழங்கு சீர்கெட்டுள்ளது. சிஏஏ பற்றி இன்னும் நிறைய பேருக்கு புரியவில்லை. அதுதான் உண்மை. இதனை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குகின்றனர். அதன் உண்மைநிலை என்ன என்பதை மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இந்தியாவின் பாதுகாப்பு முதலில் மிக முக்கியம். அதனை ஒவ்வொருவரும் கருத்தில் கொண்டால் சிஏஏவை நிச்சயம் அனைவரும் வரவேற்பர். ஆனால் இதுகுறித்து முதல்வர், பிரதமர் தெளிவாக பதிலளித்துள்ளனர். அப்படியிருந்தும் எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்து இதை அரசியலாக்குகின்றனர். இங்கு வாழும் முஸ்லிம் மக்களுக்கு ஏதாவது பிரச்னை வந்தால் தேமுதிக முதல் கட்சியாக களமிறங்கும்.
மக்கள் தெளிவடைந்தால் இந்த குழப்பத்துக்கு நிச்சயம் முற்றுபுள்ளி வைக்க முடியும். தேமுதிக என்றைக்கும் கூட்டணி தர்மத்தை கடைபிடித்து கொண்டு தான் இருக்கும். முதல்வரும் அந்த கூட்டணி தர்மத்தோடு மாநிலங்களவை எம்.பி. பதவியை தருவார் என நம்புகிறோம். ஏற்கெனவே இதுகுறித்து கேட்டதுதான். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.