திருச்சி: தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்படுமா என்பது குறித்து கட்சி கூடி முடிவெடுக்கும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் புதிய அணையின் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, கொள்ளிடம் ஆற்றில் இருந்த 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், புதிய கதவணை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 2021ம் ஆண்டு ஜனவரிக்குள் முடிந்துவிடும். இதுவரை 35% பணிகள் முடிந்துள்ளன. அதே சமயம் ஜூன் மாதம் டெல்டாவுக்கு நீர் திறக்கப்படுவதால் கதவணை கட்டும் பணிகள் பாதிக்கப்படாது. கொள்ளிடம் ஆற்றில் ரூ.387.60 கோடியில் புதிய கதவணை கட்டுப்பட்டு வருகிறது என்றார்.
வேளாண் மண்டலம் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. சிஏஏ விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளைப் பரப்பி வருகின்றன. காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் மணலுக்குப் பதிலாக எம் சாண்டைப் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்றார்.
மேலும், தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி தருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாநிலங்களவை எம்.பி. பதவி கேட்க கூட்டணிக் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. தேமுதிகவுக்கு எம்.பி. பதவி தருவது குறித்து கட்சி கூடி முடிவு செய்யும் என்று பதிலளித்துள்ளார்.