திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை (பிப். 27) காலமானார். திருவொற்றியூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி. சாமி (59). இவர் கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 6.10 மணியளவில் அவரது உடல்நிலை மோசமாகி திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தில் உள்ள அவரது வீட்டிலேயே மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே கே.பி.பி. சாமி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், கே.பி.பி. சாமியின் மறைவு திருவொற்றியூர் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.