தில்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, மோதலை உருவாக்கி, குளிர்காய நினைத்த பா.ஜ.க.வின் பதுங்கு திட்டங்கள் தலைநகர் தில்லியில் அம்பலமாகியுள்ளன. வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த நான்கு நாட்களாக நீடித்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்திருக்கிறது. 250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தில்லி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யும்படி தில்லி போலீசாருக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் உள்ளிட்ட அமர்வு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெறுப்பான பேச்சின் மூலம் வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருந்தால் இத்தகைய உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும். இதற்கு முழுக்க முழுக்க காரணம் தில்லி காவல்துறை தான் என்று நீதிபதிகள் கடுமையாக குற்றம் சாட்டினர்.
தங்களது உரிமைகளை பாதுகாப்பதற்காக ஜனநாயக வழியில், அமைதியாக பெருந்திரளாக போராடிக் கொண்டிருக்கிறவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டு, 27 பேர் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கு முழு பொறுப்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா தான். எனவே, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் இடமாற்றம் என்பது நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது. முதற்கட்டமாக தில்லியில் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.