ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 300 பேரை மீட்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து 900-க்கும் அதிகமான மீனவர்கள், மீன்பிடி தொழில் செய்வதற்காக, ஈரான் நாட்டில் தங்கி உள்ளனர். அவர்களில் 700-க்கும் அதிகமானோர் குமரி மாவட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள். தற்போது கரோனா பாதிப்பு ஈரானை அச்சுறுத்தி வருவதால், குமரி மீனவர்கள் அனைவரும் நாடு திரும்ப விரும்புகின்றனர்.
இந்த நிலையில் ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 300 பேரை மீட்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப உதவுமாறு ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
கரோனா பாதிப்பு காரணமாக ஈரானில் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.