சொத்து பிரச்னை காரணமாக மல்லி காவல் நிலையம் முன்பு தீக்குளித்தவர் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டுராயபுரம் பகுதியை சேர்ந்தவர் கந்தையா, இவருக்குஜோதிமுருகன் என்ற மகனும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கந்தையாவினுடைய பூர்வீகச் சொத்துக்கள் அனைத்தையும் மகள் லட்சுமி பெயரில் எழுதி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்த நிலையில் சொத்து பிரச்னை குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மல்லி காவல் நிலையத்தில் ஜோதிமுருகன் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி திடீரென மல்லி காவல் நிலையம் முன்பு ஜோதி முருகன் தான் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து அவரது உடல் முழுவதும் தீ பற்றி மள மளவென எரிந்த நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் தீயை அனைத்து படுகாயமடைந்த ஜோதிமணியை சிவகாசி அரசு மருத்துமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு (பிப்28)வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து மல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.