அரசிடம் எதுவும் தெரிவிக்காமல் படப்பிடிப்பு நடத்துவதால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, இன்று சென்னை சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. படப்பிடிப்பு நடக்காத சமயத்தில் ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, அரசிடம் எதுவும் தெரிவிக்காமல் படப்பிடிப்பு நடத்துவதால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன என்று கூறினார்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்க ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.