திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பழையகோட்டை கிராமம் புறத்தாக்குடியில் புனித வனத்து அந்தோனியார் ஆலய திடலில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது.
ஆலயத்தில் சிறப்பு திருப்பலி முடிந்து புனித நீர் தெளிக்கப்பட்டு ஊர்வலமாக வாடிவாசல் வந்தடைந்த கோவில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டுள்ளது. 700-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காணும் விழாவினை மணப்பாறை வருவாய் வட்டாட்சியர் தமிழ்கனி, காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோவில் காளைகளை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் குவிந்திருந்த காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே சீறிபாய்ந்தது. சில காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து அடக்கினர்.
காளைகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, ரொக்கம், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இருத்தரப்பினருக்கும் தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது.