முரசொலி அலுவலக நில விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பு மனுத்தாக்கல் செய்துள்ளது.
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில பாஜக செயலாளர் ஆர்.ஸ்ரீநிவாசன் குற்றம்சாட்டியதுடன், அதுதொடர்பான புகார் மனுவை தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார்.
இந்தப் புகார் மனுவை விசாரித்த ஆணையமானது, உரிய பதிலை அளிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், மு.க.ஸ்டாலினுக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து நிலம் தொடர்பாக முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் என்ற முறையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில் முரசொலி அலுவலக நில விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.