சென்னை: தமிழகத்தில் பேரூராட்சி மற்றும் மாநகராட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியார்களை சந்தித்தார்.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 77.46% மொத்த வாக்குகள் பதிவாகின. ஊரகப் பகுதிகளில் 49,688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பல்வேறு காரணங்களுக்காக 25 பதவிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பணியாளர்கள் உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 16,570 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஜனவரி 6ம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்பார்கள். உள்ளாட்சித் தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.
மேலும் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக எழுப்பிய புகார்களுக்கு உடனுக்குடன் விளக்கம் அளிக்கப்பட்டது. 100க்கு 100% உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற்று முடிந்துள்ளது என்று கூறினார்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்பதை நாங்கள் ஏற்க முடியாது. ஏன் என்றால், வாக்காளர் பட்டியலை நாங்கள் தயாரிப்பது இல்லை. அதனை இந்திய தேர்தல் ஆணையம் தயாரிக்கிறது.
நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுப்பியதற்கு, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பழனிசாமி பதில் அளித்தார்.