கோபி: கோபி அருகே தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் வெற்றி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(38), அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே ஊரில் அரசுப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணிபுரியும் மகேஸ்வரி என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 15 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
குழந்தைகள் இல்லை. அதே ஊரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை கார்த்திகேயன் வீடு உள்பக்கமாக தாளிட்டபடியும்,வெகு நேரமாக திறக்காமலும் இருந்த காரணத்தினால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை தட்டி கூப்பிட்ட போதும், உள்ளே எந்த சத்தமும் வராததால் சந்தேகமடைந்து கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து பார்க்கையில் தம்பதியர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீஸார் கோபி அரசு மருத்துவமணைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரின் உறவினர்களிடத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.