திருநெல்வேலி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் பல்வேறு கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி மேலப்பாளையத்தில் அனைத்துக் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலப்பாளையம் சந்தை முக்கு பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய பேரணியில் தேசியக்கொடியை ஏந்தியபடி பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் திரண்டனர்.
சந்தை முக்கு பகுதியில் தொடங்கிய பேரணி திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் சாலை, வி.எஸ்.டி. பள்ளிவாசல் பேருந்து நிறுத்தம், கொட்டிக்குளம் கடைவீதி, பஜார் திடல் வழியாக ஜின்னாதிடல் பகுதியை அடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பேரணியில் 650 மீட்டர் நீள தேசியக்கொடியை பெண்கள் ஏந்திச் சென்றனர். குடைகள், அட்டைகள், பதாகைகளில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசங்களை எழுதியிருந்தனர்.
அனைத்து உலமாக்கள் சபை, திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், தமுமுக மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.