டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து தேர்வாணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
1. டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4 தேர்வுகளில் இராமேஸ்வரம், கீழக்கரையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் 40 இடங்களை பிடித்து இருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
2. 2017-18 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி 2ஏ தேர்வுகளில் முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களில் 30 பேர் இந்த மையங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஐயத்தை அதிகப்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளிக்க வேண்டும்!
3. அதிகம் பேர் முதலிடம் பெற்ற தேர்வு மையங்களில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தேடி வந்து தேர்வு எழுதியிருப்பது இயல்பாக நடந்த ஒன்றா? திட்டமிட்டு செய்யப்பட்ட ஏற்பாடா? என்பது குறித்து விளக்கம் தேவை. இதில் முறைகேடு நடந்திருந்தால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.