கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு மழை மாதமாக அமைந்துவிட்டது. இதுபோல கடந்த 1995ம் ஆண்டு தான் ஜனவரியில் தான் மழை பெய்தது என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.
இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதாவது, நாளையும் இன்று போல மழைக்கான வாய்ப்பு உள்ளது. பிறகு ஜனவரி 9ம் தேதி வாக்கில் வடகிழக்குப் பருவ மழை விடைபெறுகிறது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சென்னைக்குக் கிடைக்க வேண்டிய வடகிழக்குப் பருவ மழையின் அளவு குறைவாக இருந்தது. இந்த வித்தியாசத்தை ஜனவரி முதல் வாரத்தில் பெய்த மழை ஈடுகட்டியது.
தெற்கு சென்னைக்கு தற்போது மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது வடகிழக்குப் பருவமழை சென்னைக்குக் கொடுத்திருக்கும் ஒரு நல்வாய்ப்பாகவே கருத வேண்டும். வழக்கமான புயல், வெள்ளம் என எதையும் சந்திக்காமல், தேவையான மழையை மட்டும் கொடுத்து, வரும் கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வாழ வகை செய்திருக்கிறது.
மிகப்பெரிய இடைவெளியை பருவ மழை எடுக்கும் முன், இவ்விரண்டு மழை நாட்களையும் மக்களே மகிழ்ச்சியோடு ரசியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.