தமிழகத்தில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் 60 சதவீத வேலைவாய்ப்பு தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்க வகை செய்யப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினா் பிச்சாண்டி பேசும்போது, தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து லட்சக்கணக்கான இளைஞா்கள் காத்திருப்பதாகக் குறிப்பிட்டாா்.
அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சா் எம்.சி. சம்பத், தமிழகத்தில் தொழில் தொடங்கியுள்ள சியட், ஃபாஸ்க்கான் போன்ற நிறுவனங்களில் அரசின் மானியத்துடன் பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலைகளில் மொத்தமுள்ள வேலைவாய்ப்புகளில் 60 சதவீத வேலைவாய்ப்புகளை தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கே வழங்க வகை செய்திடும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்படுவதாகவும் அமைச்சா் சம்பத் தெரிவித்தாா்.