தமிழகத்துக்கு வழங்கிய நற்சான்றிதழ் உண்மையல்ல என்று குற்ற ஆவண காப்பகமே சொல்கிறது: கே.எஸ். அழகிரி

மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய நற்சான்றிதழ் உண்மைக்குப் புறம்பானது என்பதை குற்ற ஆவண காப்பகமே சொல்கிறது என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய நற்சான்றிதழ் உண்மைக்குப் புறம்பானது என்பதை குற்ற ஆவண காப்பகமே சொல்கிறது என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவிலேயே நல்லாட்சி நடத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று மத்திய பா.ஜ.க. அரசின் பணியாளர் நலத்துறை சமீபத்தில் நற்சான்றிதழ் வழங்கியது. அத்தகைய நற்சான்றிதழுக்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்பதற்கு 2018 ஆம் ஆண்டிற்கான குற்ற நிகழ்வுகள் குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்கள் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2018 ஆம் ஆண்டில் நடந்த தற்கொலை நிகழ்வுகளில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்தபடியாக, உடல்நலக் குறைவு காரணமாக 3034, குடும்ப பிரச்சினைகள் காரணமாக 6433 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் மொத்த தற்கொலைகளில் 10.3 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுவதாக புள்ளி விவரம் கூறுகிறது.

அதுபோல, குடும்ப தற்கொலைகளிலும் தமிழகம் முன்னிலைப் பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசு அதிகாரிகளில் 173 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்வதில் 10.8 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 3162 பேர் தற்கொலை செய்து கொண்ட முதன்மை மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் இத்தகைய தற்கொலைகளில் 13 சதவிகிதம் தமிழகத்தில் நடக்கிறது. காவல் நிலைய சிறை கைதுகளில் 12 பேர் இறந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பொதுச் சொத்துகளுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அதிகபட்சமாக தமிழகத்தில் 2241 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய புள்ளி விவரங்களைப் பார்க்கிற போது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எத்தகைய சீர்குலைவான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு உரிய புள்ளி விவரங்களை மத்திய அரசின் குற்ற ஆவண காப்பகம் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நல்லாட்சி நடைபெறுகிறது என்று மத்திய பா.ஜ.க. அரசு நற்சான்றிதழ் வழங்குவதை விட கேலிக் கூத்தானது வேறு எதுவும் இருக்க முடியாது.

மத்தியில் நடைபெறும் பா.ஜ.க. ஆட்சி தமது கட்சியின் குண்டர்களுக்கு முகமூடி அணிவித்து, ஆயுதங்களை வழங்கி குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் அடிப்படையில் கருத்துரிமைக்காக போராடுகிற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது, காட்டு மிராண்டித்தனமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இத்தகைய அராஜகப் போக்கு கொண்ட மத்திய பா.ஜ.க. அரசு தான் இந்தியாவிலேயே குற்றச் செயல்களுக்கான நிகழ்வில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிற தமிழகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

இதைவிட உண்மைக்குப் புறம்பான நகைப்பிற்குரிய செயலை பா.ஜ.க.வைத் தவிர வேறு எந்த அரசும் செய்ய முடியாது. மத்திய பா.ஜ.க. அரசின் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவு தெரிவிக்கிற, தலையாட்டி பொம்மையாக அ.தி.மு.க. அரசு மாறியதால் இத்தகைய நற்சான்றிதழை அடிப்படை ஆதாரமில்லாமல் பா.ஜ.க. அரசு வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் நிறுவனமான தேசிய குற்ற ஆவண காப்பகமே இந்த நற்சான்றிதழ் உண்மைக்கு புறம்பானது என்று அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் அறிக்கையின்படி, தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை தடுக்க தவறிய அ.தி.மு.க. அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com