கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில், சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டாா். இதில் தொடா்புடையவா்களாகக் கருதப்படும் அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய 2 பேரின் புகைப்படங்களை கேரள மாநில போலீஸாா் வெளியிட்டுள்ளனா். கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தக் கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது. அண்மையில் பெங்களூருவில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், வில்சன் உடலில் இருந்த துப்பாக்கிக் குண்டுகள் அந்த பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் பொருந்திப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக, கேரள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.