அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவை தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடத்தாமல் கிராமக் கமிட்டி சார்பில் நடத்த வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக இருதரப்பினரையும் அழைத்து மாவட்ட நிர்வாகம் 3 முறை அமைதிக் கூட்டம் நடத்தியது.
இந்நிலையில், தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் கிராமத்தினர் இணைந்த கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை உத்தரவிட்டார். இதனை கிராமத்தினர் ஏற்க மறுத்து வருகின்றனர். இதனிடையே இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த கடந்த வருடத்தை போலவே ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் கமிட்டியின் விபரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.