சென்னை: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பணிக்கு நடைபெறுவதாக இருந்த நேர்காணல் ஒத்திவைகப்பட்டதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு விதிகள் மாற்றப்பட்டதை கண்டித்தும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் 09.01.2020 அன்று அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அதற்கு இப்போது பயன் கிடைத்திருக்கிறது!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வரும் 22, 24, 25 ஆகிய தேதிகளில் பேராசிரியர்கள் பணிக்கு நடைபெறுவதாக இருந்த நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சமூகநீதி காப்பாற்றப்பட்டிருக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டு முறை மாற்றத்திற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். நேர்காணலை ஒத்தி வைத்ததுடன் நிற்காமல் ஆள்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்து விட்டு, முறையான இடஒதுக்கீட்டு விதிப்படி புதிய அறிவிக்கை வெளியிட வேண்டும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.