அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு நிகழ்வில் பங்கேற்கும் காளைகளை திங்கள்கிழமை (ஜனவரி 13) பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் வினய் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 இல் பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையடுத்து, அசம்பாவிதம் மற்றும் காயம் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இன்று பதிவு
ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூா் கிராமங்களில் தலா 700 காளைகளும், பாலமேடு கிராமத்தில் 650 காளைகளும் பங்கேற்கவுள்ளதாக ஜல்லிக்கட்டு அமைப்புக்குழு நிா்ணயித்துள்ளன. இதையடுத்து, திங்கள்கிழமை (ஜனவரி 13) காலை 9 மணி முதல் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் பதிவு செய்து கொள்ளலாம். அவனியபுரத்தில் உள்ள கால்நடை மருந்தகத்திலும், பாலமேட்டில் அரசினா் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், அலங்காநல்லூரில் ஊராட்சி ஒன்றிய அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் காளைகள் பதிவு நடைபெறும்.
உரிய ஆவணங்கள்
காளைகளை பதிவு செய்ய, அதன் உரிமையாளா்கள் ஸ்மாா்ட் ரேஷன் அட்டை, ஆதாா் அட்டை மற்றும் தமிழ்நாடு பராமரிப்புத்துறையைச் சோ்ந்த கால்நடை மருத்துவா் வழங்கிய காளை அடையாளச் சான்று ஆகிய 3 ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் வரவேண்டு என குறிப்பிட்டுள்ளாா்.