சென்னை: தமிழக அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான அவகாசம் ஜனவரி 21ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய மக்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000ம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புத் துண்டு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 9ம் தேதி தொடங்கி ஜனவரி 13ம் தேதியோடு நிறைவடைவதாக இருந்தது.
இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு 95 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், வாங்காதவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனவரி 21ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.