சென்னை: போகி கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் பல இடங்களில் பழைய பொருட்களுடன் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்ததால் இன்று செவ்வாய்க்கிழமை (ஜன.14) அதிகாலை பனி மூட்டத்துடன் புகை மூட்டம் சேர்ந்ததால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பொங்கலை வரவேற்கும் விதமாக, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பழையன கழிதலும், புதியன புகுதலுமாக வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாக போகிப்பண்டிகையை கொண்டாடினர்.
சென்னையில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்பட்டு வந்த நிலையில், இன்று போகி கொண்டாட்டத்தையொட்டி வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து கொண்டாடினர். இதனால் பனி மூட்டத்துடன் புகை மூட்டமும் சேர்ந்துகொண்டதால், கடுமையான புகை மூட்டம் காரணமாக சாலைகளில் வருபவர்கள், வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை போட்டவாறு வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
சென்னை கத்திப்பாரா, விருகம்பாக்கம் மற்றும் வடபழனி பகுதிகளில் கடுமையான பனி மற்றும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
புகை மூட்டம், பனி காரணமாக சென்னையில் இருந்து மைசூரு செல்லும் ட்ரூ ஜெட், ஏர் இந்தியா விமானங்கள் தாமதம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போகி பண்டிகை காரணமாக மக்கள் வேண்டாத பழைய பொருட்களை எரித்து வருவதால் சென்னை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது.