சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., விவகாரத்தில் சில எதிர்க்கட்சி தலைவர்கள் வதந்தி பரப்புகிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடைபெற்றது. தேர்தல் பணிகளில் அரசு அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டனர். தமிழகம் அமைதிப் பூங்கவாக உள்ளது. அதை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எந்தத் தவறும் நடைபெறவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு என ஸ்டாலினும், திமுகவினரும் வேண்டுமென்றே குறை கூறுகின்றனர். பாமக தொண்டர்களை உற்சாகப்படுத்த அன்புமணி பேசுகிறார். சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., விவகாரத்தில் சில எதிர்க்கட்சி தலைவர்கள் வதந்தி பரப்புகிறார்கள்.
சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., விவகாரத்தில் தமிழகத்தில் எந்த சிறுபான்மை மக்களும் அச்சப்பட வேண்டியதில்லை. கூட்டணியை பொறுத்தவரை சில இடங்களில் விட்டுத்தர வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. ஆட்சி மொழிக்குழு ஆய்வு செய்ய வருவதாக எந்தத் தகவலும் வரவில்லை. எங்களைப் பொறுத்தவரை மக்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள், அவர்கள் எண்ணப்படி ஆட்சி நடைபெறும் என்றார்.