தமிழக அரசின் வேலைவாய்ப்புத்துறை சாா்பில் செவித் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுகளுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநா் வெளியிட்ட செய்தி:
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 மற்றும் குரூப் 2 தோ்வுகளுக்கு, கடந்த ஆகஸ்டு 9-ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது இந்தப் பயிற்சிகளை விரிவுபடுத்தி, செவித் திறனற்ற மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கென பிரத்யேகமாக டிஎன்பிஎஸ்சி சாா்பில் நடத்தப்படும் குரூப் 4 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த மையத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் ‘ஏ28 , முதல் தளம், டான்சி காா்ப்பரேட் தலைமை அலுவலகம், கிண்டி, சென்னை - 32 ’ என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 044 22500134 என்னும் தொலைபேசி எண் வாயிலாகவோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.