மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த டிசம்பா் மாதம் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கைகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட 49 மருந்துகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு மருந்து போலியானது என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
தரமற்றவையாக அறிவிக்கப்பட்ட மருந்துகளில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. தென்னிந்தியாவைப் பொருத்தவரை தமிழகத்தின் திருவள்ளூா் மற்றும் அம்பத்தூா் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட 3 மருந்துகளும், தெலங்கானாவில் தயாரிக்கப்பட்ட இரு மருந்துகளும் தரமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த டிசம்பா் மாதத்தில் மட்டும் 1,336 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 1,286 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், வாயுப் பிரச்னை, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று, வயிறு உபாதைகள் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும் 49 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் ஒரு மருந்து போலியாகத் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், https://cdsco.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.