தொடர் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைவு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் கடந்த மூன்று ஆண்டுகளில் சாலை விபத்துகள் 24.4 சதவிகிதம் வரை குறைந்ததாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். 
தொடர் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைவு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் கடந்த மூன்று ஆண்டுகளில் சாலை விபத்துகள் 24.4 சதவிகிதம் வரை குறைந்ததாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

நாட்டிலேயே சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து சிறப்பாகச் செயல்படுத்தி ஒரு முன் மாதிரி மாநிலமாக தமிழகம் இருப்பதாகப் பாராட்டி தமிழகத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற 31-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழாவில் இந்த விருதை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலைப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கரிடம் வழங்கினர்.விருதைப் பெற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியதாவது:

தேசிய அளவில் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைத்த முதல் மாநிலமாக தமிழகம் இருப்பதற்காக மத்திய அரசு இந்த விருதை வழங்கியுள்ளது. தமிழகம் ஒரு தொழில் வளர்ச்சியடைந்த மாநிலம். தொழில் நகரங்களில் வாகனங்கள் அதிக அளவில் உள்ளது. மக்கள் நெருக்கமும் அதிகமாக உள்ளது. கிராமங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக சாலைகள் உள்ளன. இதனால், விபத்துகள் அதிக அளவில் ஏற்பட்டது. இதைக் குறைக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எடுத்த தொடர் முயற்சிகளின் காரணமாக 2019-இல் விபத்துகளும் உயிரிழப்புகளும் கணிசமாகக் குறைந்தது.

சாலைப் பாதுகாப்பிற்காக தமிழக அரசு ரூ.65 கோடியை உயர்த்தி நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட இடங்களில் விபத்துகள் நடக்காத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், போக்குவரத்துத் துறையினர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக விபத்துகள் குறைந்தது. மேலும், முயற்சிகளை மேற்கொண்டு விபத்துகளும், உயிரிழப்புகளும் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதுதான் அரசின் நோக்கமாகும். பள்ளிப் பருவத்திலிருந்தே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாலைப் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

புதிதாக அமலுக்கு வந்துள்ள மோட்டார் வாகனச் சட்டத்தில் மக்களை ப் பாதிக்கும் (சீட் பெல்ட், ஹெல்மட்) பல்வேறு அபராதங்கள், விதிமுறைகளில் திருத்தம் செய்யக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கோப்புகளை அனுப்பியுள்ளது. தீபாவளிக்கும் பொங்கலுக்கும் இயக்கப்படும் திருவிழா சிறப்புப் பேருந்துகள் மூலம் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டுமல்லாமல் சேலம், கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களிலும் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இயக்கப்படும் இந்தப் பேருந்துகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிகக் கட்டணங்களை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து கால் சென்டர் மூலம் புகார்களை அளிக்கலாம் என்றார் அமைச்சர் விஜய பாஸ்கர்.

 தமிழகத்தில் 2016 -இல் நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் மொத்தம் 17,218 பேர் உயிரிழந்தனர். இது 2019-இல் 9,797 ஆகக் குறைந்துள்ளது. 
பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சுமார் 43 சதவிகிதம் குறைந்து 7,421 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறையின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com