தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மூன்று நாள் பயணமாக சேலம் வந்தடைந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு திங்கள்கிழமை பகல் 12 .45 மணி அளவில் வந்து சேர்ந்தார்.
மாவட்டஆட்சியர் சி.அ.ராமன் முதல்வரை விமான நிலையத்தில் வரவேற்றார். அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு முதல்வர் பழனிசாமி சென்றார்.
அங்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ரேவதி, துணைத்தலைவர் ராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
அப்போது வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் முதல்வருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
சேலத்தில் வியாழக்கிழமை வரை தங்கியிருந்து கட்சி நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார். இதையடுத்து, வியாழன் மாலை கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.