காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் பங்கேற்றார். அப்போது காவல் உதவி வாட்ஸ் ஆப் எண் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் காவலன் செயலி மற்றும் காவல் உதவி வாட்ஸ் ஆப் எண் வெளியிடும் நிகழ்ச்சியில் வேலூர் சரக வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன், டி.ஐ.ஜி.காமினி, ராணிப்பேட்டை எஸ்.பி.மயில் வாகனன் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டதைத் தொடர்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காவலன் செயலி, ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் புகார்கள் தெரிவிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தின் காவல் உதவி வாட்ஸ் ஆப் எண் 9677923100 வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காவலர்கள் ஹெல்மெட் அணிந்து பேரணியாகச் சென்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.ஜி, காவல்துறை பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், காவலன் செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.