தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே வேலை முடிந்து வீட்டுக்கு தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி கீழேவிழுந்ததில் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தம்மம்பட்டி காந்திகரைச் சேர்ந்தவர் முத்து (40). இவர், வாழப்பாடி செல்லும் வழியில் உள்ள திம்மநாயக்கன்பட்டியில் முடிதிருத்தும் நிலையம் நடத்தி வருகிறார். வேலை நேரம் முடிந்து, தனது இருசக்கர வாகனத்தில் மகன் தீனாவுடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குப் புறப்பட்டனர்.
இந்த நிலையில், கீழ்கணவாய் வளைவுப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்து சறுக்கியது.
இதில், தீனா (20) சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்துச் சென்ற தம்மம்பட்டி போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து, இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்ததில் நிகழ்ந்ததா அல்லது வாகனம் மோதியதில் நிகழ்ந்ததா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.