மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தைப் பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய மூன்று இடங்களிலும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கே.மாணிக்கம் முன்னிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.
ஜல்லிக்கட்டு சரியாக நடந்து கொண்டிருப்பதால் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறி ஏ.கே.கண்ணன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், ஹேமந்த் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.