தஞ்சாவூர்: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஏற்கெனவே ஒருவர் இறந்த நிலையில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் உள்ள மதுபானக்கடை அருகே புதன்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்த போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், அரிவாளால் வெட்டப்பட்டதில் வடக்கு வாசல் காளியம்மன் கோயில் காலனியைச் சேர்ந்த சக்திவேல் (36) நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடக்கு வாசல் இரட்டைப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த செபஸ்டியானும் (26) வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். இதில், விளார் சாலை தில்லை நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (26) சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், வெங்கடேசன், சூர்யா உள்பட 4 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.