சென்னை: பொங்கல் பண்டிகையின் நான்காம் நாளான இன்று தமிழக மக்கள் அனைவரும் காணும் பொங்கலை மிக மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலாத் தளங்களில் இன்று காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சென்னையில் குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் மெரீனா கடற்கரையில் இன்று மதியம் முதல் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. சென்னை மெரீனா கடற்கரையில் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பொதுமக்களும் மிக மகிழ்ச்சியோடு சுற்றுலாத் தளங்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர். ஆங்காங்கே லேசாக மழை பெய்தும், அதனைப் பொருட்படுத்தாமல் காணும் பொங்கலை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.
மெரீனா கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மெரீனா கடற்கரையைச் சுற்றிலும் பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு உதவும் வகையில் மெரீனா கடற்கரையின் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.