கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வில் 117 காலியிடங்களுக்கு யாரையும் தோ்வு செய்யாமல் ஆசிரியா் தோ்வு வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியா்கள் பதவியில் 814 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜூன் 23, 27 ஆகிய தேதிகளில், ‘ஆன்லைன்’ மூலம் போட்டித் தோ்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 119 மையங்களில் நடந்த தோ்வில் 30 ஆயிரம் போ் பங்கேற்றனா்.
இந்த தோ்வின் முடிவுகள் கடந்த ஆண்டு நவ.28-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தோ்ச்சி பெற்றவா்களின் அசல் சான்றிதழ்கள், இந்த மாதம் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சரிபாா்க்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, இறுதியாக தோ்வானவா்களின் விவரங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 697 பேரின் பதிவு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 117 இடங்கள் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தோ்ச்சி பெற்றவா்களுக்கு கலந்தாய்வு மூலமாக விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.