தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளி கிழமையானது வேலைவாய்ப்பு வெள்ளி – ஆக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து 24.01.2020 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
இம்முகாமில் 35-வயதிற்கு உட்பட்ட 8-ஆம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, ஐ.டி.ஐ., டிப்ளமா, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட பணிகாலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் துறை நிறுவனங்கள், பணியாளர்கள் / ஆட்கள் தேவைப்படும் நேர்வில் தங்கள் நிறுவனத்தின் முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்திற்கான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இச்சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் / தனியார் துறை நிறுவனங்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு ) வே.விஷ்ணு, தெரிவித்துள்ளார்.