இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம் தான் பொங்கியிருக்கிறது: ராமதாஸ் வேதனை

இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம் தான் பொங்கியிருக்கிறது என்று பாமக நிறுவனர்  ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் பொங்கல் விற்பனை
டாஸ்மாக் பொங்கல் விற்பனை

சென்னை: இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம் தான் பொங்கியிருக்கிறது என்று பாமக நிறுவனர்  ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது

இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில்  ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும். இந்த அவலம் என்று தீரும்?

தமிழ்நாட்டில்  பொங்கல் விழாவின் 3 நாட்களில்  ரூ. 605 கோடிக்கு மது விற்பனை: செய்தி - கரும்பு விற்பனையாகவில்லை... இஞ்சி, மஞ்சள் கொத்துகளை வாங்க ஆள் இல்லை. மதுக்கடைகளில் மட்டும் மாநாட்டுக் கூட்டம். தமிழன் என்றொரு இனமுண்டு... தனியே அவர்க்கொரு குணமுண்டு என்பார்களே.... அது இது தானோ?

தமிழ்நாட்டில் பொங்கல் விழாவையொட்டி ரூ.605 கோடிக்கு மது விற்பனை. வரலாற்று சாதனையாம். ஆஹா.... இதுவரை தமிழ்நாட்டு குடிமகன்கள் குடிப்பதில் சாதனைகளை மட்டும் தான் படைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்களாம். அடக் கொடுமையே?

பொங்கல் திருநாளில் புதுப்பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்கல் தான் பொங்கும். ஆனால், இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம் தான் பொங்கியிருக்கிறது. முதல் பொங்கல் வயிற்றை நிறைக்கும்... இரண்டாவது பொங்கல் வயிற்றை அரிக்கும். தமிழா நீ மதுவை கைவிட்டு தலைநிமிர்வது எந்நாளோ?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com