கொச்சி: ரயில்வேயின் உணவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து கேரள உணவுகளையும் மீண்டும் பட்டியலில் இணைத்துள்ளது ஐஆர்சிடிசி.
கேரளாவில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் இதுவரை வழங்கப்பட்டு வந்த பாரம்பரிய உணவுப் பொருட்களை நீக்கி, வட மாநில உணவுகளான பாவ் பாஜி உள்ளிட்டவைகளை சேர்த்து மாற்றங்களை செய்த இரண்டு நாட்களில், பொதுமக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததால், ஐஆர்சிடிசி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பயணிகள் மற்றும் முக்கியப் பிரதிநிதிகள் அளித்த கோரிக்கையை ஏற்று, கேரள உணவுப் பொருட்கள் பட்டியலில் மீண்டும் இணைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஐஆர்சிடிசியின் உணவுப் பட்டியலில் இருந்து அப்பம், முட்டைக் குழம்பு, பரோட்டா, தோசை, சப்பாத்தி, புட்டு ஆகியவையும், தின்பண்டங்கள் பட்டியலில் இருந்து பஜ்ஜி, கொழுக்கட்டை, உன்னியப்பம், நெய்யப்பம், சுழியம் உள்ளிட்டவையும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.